தரமற்ற சாலையின் விளைவுகள்

2
தரமற்ற சாலையின் விளைவுகள்

ரமான சாலைகள் எதனால் அவசியம் என்பதைப் பார்ப்போம். Image Credit

சாலைகள்

தரமான சாலை எந்த இடத்துக்கும் அவசியமானது ஆனால், இந்தியாவில் இதற்கான முக்கியத்துவம் மிகக்குறைவாக உள்ளது.

ஒப்பீட்டளவில் தமிழகத்தில் சாலைகள் சிறப்பானதாக உள்ளதாகக் கூறப்படுகிறது. பயணிக்கும் கிராம சாலைகள் உட்படப் பல இடங்கள் வியப்பை அளித்துள்ளன.

இங்கெல்லாம் எப்படிச் சாலை அமைத்தார்கள்? என்று தோன்றும் அளவுக்குக் குக்கிராமத்திலும் கூடச் சாலைகள் சிறப்பானதாக உள்ளது.

மற்ற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் கூடத் தமிழகச் சாலையைப் பாராட்டியுள்ளனர் ஆனால், இவை நகரச் சாலைகளுக்குப் பொருந்தாது.

காரணம், ஒவ்வொருவரின் முதுகெலும்பையும் உடைத்துப் படுக்க வைக்க வேண்டும் என்று உறுதிமொழி எதுவும் எடுத்துள்ளார்களா என்று தெரியவில்லை.

நகரச் சாலைகள்

சென்னை மட்டுமல்ல, எந்தப் பெரிய தமிழக நகரத்தை எடுத்துக்கொண்டாலும் மிக மோசமான சாலையாக உள்ளது.

ஏகப்பட்ட Patching வேலை செய்து இருப்பார்கள் அல்லது, சாலையே மறுசீரமைக்கப்படாமல் இருக்கும்.

சென்னையில் வசிப்பதால், சென்னையை எடுத்துக்காட்டாகக் கொள்கிறேன்.

இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்துபவர்கள் ஒவ்வொருவருக்கும் சென்னையில் பயணிப்பது எப்படிப் பட்ட நரக வேதனை என்று தெரியும்.

சென்னையில் தரமான சாலையைப் பார்ப்பதே அரிதாக உள்ளது. அப்படியே இருந்தாலும், எங்காவது Patching செய்து இருப்பார்கள்.

சுருக்கமாக, தொடர்ச்சியாக 300 மீட்டருக்கு (Patching இல்லாத) தரமான சாலையைச் சென்னையில் பார்க்கவே முடியாது.

அதிமுக ஆட்சியிலாவது பரவாயில்லை, திமுக ஆட்சியில் படு மோசம்.

இதோடு சாலையின் உயரத்தை அதிகப்படுத்தி வீடுகளைப் பள்ளமாக்கி வரும் கொடுமைகளைப் பற்றித் தனிக்கட்டுரையே எழுதலாம்.

எதனால் நகரங்களில் இப்பிரச்சனை?

நகரங்களில் தான் சாலை அமைப்பதில் அதிக கமிஷன் அடிக்க முடியும். எதையாவது காரணத்தை வைத்துச் சாலையைத் தோண்டி வைத்து விடுவார்கள்.

தரமான சாலையாக அமைப்பதில்லை என்பதால், ஓரிரு மாதங்களிலேயே சாலை பெயர்ந்து விடும், குழியாகி விடும்.

கிராம பகுதிகளில், சிறு நகரப் பகுதிகளில் இருக்கும் சாலையின் தரம், பெரு நகரங்களில் இருக்காது. காரணம், இங்கே அடிக்கப்படும் அளவற்ற கமிஷன்.

இவர்கள் சாலையை மட்டும் தரமற்று அமைக்கவில்லை அதோடு கனிம வளங்களையும் வீணடித்துக்கொண்டு உள்ளனர்.

கனிம வளங்கள் அமுத சுரபி அல்ல என்பதை பற்றி கொள்ளை அடிப்பவர்களுக்கு கவலையில்லை.

Patching

சாலை துறையில் பணி புரிபவர்களுக்கும், அதை நிர்வகிப்பவர்களுக்கும் அடிப்படை அறிவு என்பதே இல்லை என்றே கருதுகிறேன்.

இதைக்கூறக் காரணம் உள்ளது, நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள்.

ஓர் இடத்தில் குழியுள்ளது என்று Patching செய்தால், அதே சாலை மட்டத்துக்குச் செய்வதில்லை. அதைக் கரடு முரடாக மேடாக்கி விடுவார்கள்.

காரில் செல்பவர்களுக்குப் பெரியளவில் அதிர்வு இருக்காது ஆனால், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு இடுப்பே கழண்டு விடும். எதிர்காலத்தில் முதுகெலும்பு பிரச்சனை உறுதியாக வரும்.

எங்காவது இருந்தால், சரி என்று சமாளிக்கலாம் ஆனால், எங்கும் இதே நிலை தான்.

ஒரு குழியை ஒழுங்கற்ற மேடாக்குவதால் எந்த வகையில் இப்பிரச்சனை சரி செய்யப்படுகிறது? குழிக்குப் பதிலாக கரடு முரடான மேடாக உள்ளது, அவ்வளவு தானே!

அடிப்படை அறிவு

புரிதலும், கொஞ்சமாவது சிந்திக்கும் திறனும் உள்ளவருக்குப் புரியும் ஆனால், இதுவரை எவருமே உணரவில்லை என்பது வியப்பளிக்கிறது.

இதை உணர இதற்கென்று படித்து இருக்க வேண்டியதில்லை, அடிப்படை அறிவு இருந்தால் போதுமானது.

சாலையைச் செப்பனிடும் நபர்களுக்குத் தான் இதைப் பற்றிய புரிதல் இல்லையென்றால், அவர்களை வேலை வாங்கும் அதிகாரிகளுக்கும் அறிவு இருக்காதா?

இப்படி மேடாக, கரடு முரடாக Patching செய்யக் கூடாது, ஏற்கனவே உள்ள சாலை மட்டத்துக்குத் தான் Patching செய்ய வேண்டும் என்று ஒருத்தர் கூட அறிவுறுத்த மாட்டார்களா?!

இதில் என்ன கொடுமை என்னவென்றால், Patching செய்யும் நபரே இரு சக்கர வாகனத்தில் இது போன்ற சாலையில் பயணிப்பார்.

அட! வாகனம் ஓட்டும் போது நாமே இப்பிரச்சனையை எதிர்கொள்கிறோமே எனவே, சரியாகச் சாலை மட்டத்துக்கு Patching செய்வோம் என்று தோன்றவில்லை பாருங்களேன்.

மூளை என்ற ஒன்றைக் கழட்டி வைத்துவிட்டுத் தான் பலர் வேலையே செய்கிறார்கள் போல உள்ளது.

என்னைப் போல லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பலர் யோசித்து இருப்பார்கள். இதை ஏன் சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பில் உள்ளவர்கள் யோசிக்க அல்லது செய்ய மறுக்கிறார்கள்?

இங்கே மட்டுமல்ல, தேசிய நெடுஞ்சாலையிலும் இதே தான். குறிப்பாக பெருமாநல்லூர் – கோவை தேசிய நெடுஞ்சாலை Patching படு மோசமாக இருக்கும்.

பொறுப்பில் உள்ளவர்களைக் காரில் வராமல் இரு சக்கர வாகனத்தில் தினமும் அலுவலகம் வர வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தாலே மக்களின் சிரமம் உணர்வார்கள்.

தரமான சாலையால் என்ன பயன்கள்?

  • வாகனத் தேய்மானம் குறைகிறது.
  • விபத்து குறைகிறது.
  • மக்களின் உடல் நிலை பாதுகாக்கப்படுகிறது.
  • எரிபொருள் வீணாவது தடுக்கப்படுகிறது.
  • சிறப்பான பயண அனுபவத்தைத் தருகிறது.
  • செல்லும் இடத்துக்கு விரைவாகச் செல்ல முடிகிறது.

ஆனால், மேற்கூறிய அனைத்துமே சென்னையில் எதிராக நடைபெறுகிறது. வாகனம் ஓட்டவே கடுப்பாக உள்ளது. பத்தடிக்கு ஒரு Patching.

எப்படித்தான் வாகனம் ஓட்டுவது?

போக்குவரத்து நெரிசலை விட, மோசமான சாலைகளே அதிக எரிச்சலைக் கொடுக்கின்றன. இப்பிரச்சனை எப்போது சரியாகுமோ! 🙁 .

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. இந்த பதிவின் மூலம் உங்களின் ஆதங்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது.. நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.. Patching எதுக்காக போடுறோமோ?? என்று தெரியாமலே இந்த பணி பல இடங்களில் நடைபெற்று கொண்டு வருகிறது.. உண்மையில் அரசாங்கத்தில் பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் சரியாக இருக்க வேண்டும்.. இவர்கள் மட்டும் சரியாக, நேர்மையாக, ஊழலுக்கு எதிராக இருந்தால் தமிழ்நாட்டை எங்கேயோ கொண்டு செல்ல முடியும்..

    கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறைக்கு ஊருக்கு வந்த போது 20 வருடம் கழித்து என்னுடைய M.COM வகுப்பு நண்பர்கள் 9 பேர் சந்தித்தோம்.. சில நண்பர்கள் அரசாங்கத்தில் பணி புரிகின்றனர்.. பேசி கொண்டிருக்கும் போதே அரசாங்க பணியில் உள்ள நண்பர்கள் உனக்கு TA , OT, இதர படிகள் எவ்வளவு வருது, பென்சன் வருமா? வராத? என்பதை பற்றி தான் இருந்தது..

    20 வருடம் கழித்து சந்திக்கும் போது பேச எவ்வளவோ விஷியங்கள் இருந்தாலும் இவர்களின் பேச்சு இதை குறித்து மட்டும் தான் இருந்தது.. இவர்களின் கடமை உணர்ச்சியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை..

  2. வயித்தெரிச்சலை கிளப்பாதீங்க கிரி…15 வருடங்களுக்கு முன்பாகவே சிங்கப்பூரில் சாலை அமைக்கும் தொழில் நுட்பத்தை கண்டு வியந்து இருக்கிறேன். சரியான ஆழத்திற்கு சீராக பழைய சாலையை வெட்டி எடுத்துவிட்டு அதன் மேல் சரிசமமான உயரத்தில் சாலை அமைப்பார்கள். ஒரு சாலையை சரிசெய்ய போகிறார்கள் என்றால் அதன் அருகிலேயே இன்னொரு தரமான சாலை அமைத்து போக்குவரத்திற்கு எந்த இடையூறும் இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள்….இங்கயும் இருக்கிறார்களே….பல நூறு வருடம் ஆனாலும் திருந்தமாட்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!